Navigation Menu

தன்னைத் தானறிதல்!



நண்பா! உன்னோட பேச்சால மேனேஜரையே அசச்சிப்புட்ட போ! நீ பெரிய ஆளுடா! உன்ன யாராலையும் அசைக்க முடியாதுடா!

ஒரு அப்ளிகேசென் பார்ம்மையே உன்னால பில்லப் பன்ன முடியல, உனக்கெல்லாம் எவன் வேல தருவான். இந்த உலகத்துல நீயெல்லாம் எப்பிட்றா வாழப்போற?

எப்பிட்றா மச்சான் அந்த பிகரையே மடக்கிட்ட?

"..............   ............"

ஏ!.. மச்சான் யாரு! ஆளு பாக்க சினிமா ஹீரோ மாதிரி இருக்கான், மாதிரி என்ன மாதிரி, நீ ஹீரோ தாண்டா! ஒரே நேரத்துல மச்சான் அஞ்சு பேர அடிப்பாண்டா! மச்சானுக்கு மடங்கலன்னா எப்பிடி?

ச்சே! ஒரு பொண்ணு என்னய வேணான்னு சொல்லிட்டாளய்யா! பொண்ணுங்களுக்கு ஏத்த மாதிரி நான் இல்லையே! இனி எந்த பொன்னுங்களுக்குமே என்ன புடிக்காதே! நானெல்லாம் எதுக்கு வாழனும்?

                சில வேளைகளில், சில சம்பவங்களும் சில வார்த்தைகளும், நம்முடைய வாழ்க்கையே திசை திருப்பிவிடக்கூடியவை. சில புகழ்ச்சிகள் உச்சிக்கு ஏற்றுவதுபோல் ஏற்றி, பாதாளத்தில் தள்ளிவிடும் அபாயம் கொண்டவை. சில இகழ்ச்சிகள், உச்சியிலையே சவக்குழி தோண்டும் அபாயம் கொண்டவை. பெரும்பாலும் புகழ்ச்சிகளும் இகழ்ச்சிகளும் நம்முடைய உண்மை தோற்றங்களை மூடி மறைக்கும் ஒன்றாகத்தான் இருக்கிறது. புகழ்ச்சிகளும் இகழ்ச்சிகளும், நமது உடலில் பூசப்பட்டிருக்கும் சந்தனங்களாகவும், சகதிகலாகவும்தான் இருக்கின்றன. நம்மை சுற்றி இருப்பவர்கள் பெரும்பாலும் சந்தனங்களையும் சகதிகளையும் நமது உடலிலும் முகத்திலும் பூசிவிட்டுத்தான் செல்கிறார்கள். அப்போது நமது உண்மைத்தோற்றம் வெளிப்பட வாய்ப்பே இல்லை. இந்நிலையில் சந்தனமும் சகதியும் ஒன்றுதான். இன்னும் சொல்லப்போனால், இகழ்ச்சி எவ்வாளவு கொடுமையானதோ, அதை விட கொடுமையானது புகழ்ச்சி. நாம் நம்முடைய இயல்புகளை உணர்வதற்கு இவை இரண்டும்தான் பெருமளவில் பெரிய முட்டுக்கட்டைகளாக இருக்கின்றன.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு இயல்புகள். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு தோற்றங்கள். ஒவ்வொரு மனிதனும் நம்முடைய இயல்பு எது? நம்முடைய தோற்றங்கள் எது? நம்முடைய குணாதிசயங்கள் எது? நமக்கே உரிய சிறப்புத்தன்மை எது? என்பதை உணர்ந்தால்தான் அதை அவனால் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஒரு மனிதனின் சிறப்புத்தன்மைகள் பயன்படுத்தப்பட வேண்டுமெனில், அது அவனால் அடையாளம் கண்டு கொண்டிருக்கப்பட வேண்டும். ஆனால் அதை அவன் அடையாளம் காணும் முன்னரே புகழ்ச்சிகளும், இகழ்ச்சிகளும் அவனுக்கான ஒரு மாய தோற்றத்தை ஏற்ப்படுத்தி, அவனது சுயத்தை அறிய விடாமல் தடுத்து விடுகின்றன. புகழ்ச்சிகள், அவனைவிட அவனை, மிகப்பெரியவனாக காட்டுகிறது. இகழ்ச்சிகள், அவனைவிட அவனை மிகச்சிரியவனாக காட்டுகிறது.

ஒரு அழகிய காட்டிற்குள் சிங்கம் ஓன்று பல ஆடுகளை வளர்த்து வந்தது. சிங்கம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆட்டுக்குட்டியை மற்ற ஆடுகளுக்கு தெரியாமல் சாப்பிட்டு வந்தது. இந்த சிங்கத்தின் தந்திரத்தை கண்ணுற்ற புத்திசாலி ஆடு ஓன்று, மற்ற ஆடுகளிடம் சென்று.. “இங்க பாருங்கப்பா சிங்கம் நம்மள நல்லா எமாத்துது. நம்மல ஓவ்வொருத்தராயா சிங்கம் தெனமும் கொன்னு சாப்பிடுது. நாளைக்கு நாமளும் அதுக்கு இரையாகப்போறோம். அதனால சொல்றேன் வாங்க தப்பிச்சுடலாம்” என்றது.

சிங்கந்தின் வார்த்தைகளையே நம்பி வளர்ந்த ஆடுகள், புத்திசாலி ஆட்டின் சொல்லை நம்பாமல், சிங்கத்திடமே விளக்கம் கேட்டன. அதற்கு சிங்கமும் “அப்படியா! உங்களது சந்தேகங்களை நான் விரைவில் தீர்த்து வைக்கிறேன்.” என்று சொல்லி ஒவ்வொரு ஆட்டையும் தனித்தனியாக சந்தித்தது.

“இதோ பார்! நீ ஆடு அல்ல. நீ ஒரு சிங்கம். என்னைப்போல நீயும் ஒரு சிங்கம்தான். ஒரு சிங்கம் மற்றொரு சிங்கத்தை சாப்பிடாது. நீ பார்! எவ்வளவு அழகாகவும், வலிமையான சிங்கமாகவும் இருக்கிறாய்!. உன் பிடாரி மயிர் அழகோ அழகு! அதற்காக பிடாரி மயிர் இருக்கிறதா என்று தடவிப்பார்க்க முனையாதே! ஏனென்றால் ஒரு சிங்கம், தான் சிங்கம்தானா என்று சந்தேகம் கொள்ளாது. அதுதான் சிங்கங்களின் சிறப்பியல்பு. சரியா? போ!” இவ்வாறு ஒவ்வொரு ஆட்டிடமும் சொல்லவே, அனைத்து ஆடுகளும் தான் சிங்கமென்ற அசைக்க முடியா நம்பிக்கையில் நடைபோட்டன. பிறகென்ன, தாங்கள் சிங்கமென்று மாய தோற்றத்துடன் நடந்த ஆடுகள் வழக்கம் போலவே ஒவ்வொன்றாக சிங்கத்திற்கு இரையாயின. இதே போலத்தான் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் புகழ்ச்சி மற்றும் இகழ்ச்சிகள், அவனது உண்மை தோற்றத்தை கொன்று விடுகின்றன.

தன்னை உணர்ந்த ஒருவனால்தான், மற்றவர்களின் உணர்வுகளையும் உணர முடியும். தன்னை புரிந்து கொண்டவனால்தான், மற்றவர்களின் உணர்வுகளையும் புரிந்துகொள்ள முடியும். ஒருவனுக்கு, அவனுக்கு வெளியில் இருக்கும் உலகை விட உள்ளே இருக்கும் உலகம் மிகப்பெரியது. அதைத்தான் சுயம் என்பது. அவனது சுயத்தை அவன் அங்குதான் உணர முடியும். வெளி உலகில் இருந்து வரும் சில புகழ்ச்சிகளும், இகழ்ச்சிகளும் நமது உள் உலகை காண விடாமல் தடுத்துவிடுகிறது. நமக்கு வெளியில் நிகழும் சம்பவங்களையும் வார்த்தைகளையும் நம்மால் தடுக்க முடியாது, ஆனால், அவற்றை உள்வாங்கிக்கொள்வது என்பது நமது கையில்தான் உள்ளது. புகழ்ச்சிகளையும் இகழ்ச்சிகளையும் தரம் பிரித்து ஒதுக்குவதுதான் இதற்கு சிறந்த வழி. புகழ்ச்சி என்பது வேறு. உற்சாகப்படுத்துதல், பாராட்டுதல் என்பது வேறு. இகழ்ச்சி என்பது வேறு, தவறை உணரசெய்தல் என்பது வேறு. குறை கூறல் என்பது வேறு, தவறை சுட்டிக்காட்டுதல் என்பது வேறு. நம்மை நோக்கி வருபனவை இவற்றில் எவை, என்பதை சரியாக அடையாளம் கண்டுகொள்வது மட்டுமல்லாது, நாம் மற்றவர்களுக்கு செய்பவை மேற்கண்டவற்றில் எவை, என்பதனையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

புகழ்ச்சியைப்பற்றி சொல்லும்போது எனக்கு சில வரிகள் நினைவுக்கு வருகிறது. புகழ்ச்சி என்பது பூனையின் வால் போன்றது. ஒரு பூனை தனது வாலை எப்படியாவது பிடித்துவிடவேண்டும் என்ற வெறியில், அதே இடத்தில் பம்பரம் போல் சுற்றிக்கொண்டே இருந்தது. எவ்வளவு முயற்சித்தும் முடியவே இல்லை. ஒரு கட்டத்தில் பூனைக்கு சலிப்பு ஏற்படவே, “அட போங்கையா! இதெல்லாம் ஒரு பொழப்பு.” என்று கூறிக்கொண்டே வேறு வேலையைப்பார்க்க சென்றது. அப்போது பூனையின் வாலும் அதன் பின்னேயே சென்றது. ஆமாம் நண்பர்களே! கூடுமானவரை, புகழ்ச்சிகளை எதிர் நோக்காமலும், இகழ்ச்சிகளில் துவளாமலும் இருப்பது என்பதுதான், ஒவ்வொரு தனிமனிதனும் தன் சுயத்தை உணர்வதற்கான வழியாகும். அதுவே சிறந்த பலனை கொடுக்கும்.

இங்கு ஒரு போர்ப்படை தளபதி, போருக்குசென்றுவிட்டு மிகுந்த களைப்பில் படுத்திருந்தார். அவரது படுக்கையறையின் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூளைக்கு, எலி ஓன்று “க்ரீச்க்..” “க்ரீச்க்..” என்று சத்தம்போட்டுக்கொண்டே அங்கும் இங்கும் ஓடியது. இந்த சத்தத்தால் தூங்க முடியாமல் கடுப்பாகிப்போன தளபதி, தனது வாளை எடுத்து ஆக்ரோசமாக விளாசினார். எலி தப்பித்துக்கொண்டது. எவ்வளவு முயற்சித்தும் தளபதியால் எலியை கொள்ள முடியவில்லை. தளபதிக்கு கோபம் தலைக்கேறி விட்டது. ஆனாலும் எலியை கொள்ள முடியவில்லை.

ஒரு கட்டத்தில், கோபம் இயலாமையை உணர்த்தவே, பயம் கொண்டார் தளபதி. “அய்யோ நான் எவ்வளவு பெரிய தளபதியாக இருந்தேன். இப்போது ஒரு எலியை கூட கொல்ல முடியவில்லையே! போச்சா!” “இருந்தாலும் ஒரு எலியிடம் தோர்ப்பதா? வெட்கம்!.....அவமானம்!” என்றவாறு ஓடிச்சென்று மனைவியிடம் சம்பவத்தை சொன்னார்.

“சுத்த முட்டாளா இருக்கீங்களே! யாராவது எலியை வாளால் வெட்டுவார்களா! இதற்கு ஒரு பூனையை வளர்த்திருந்தால் இந்த பிரச்சினை வந்திருக்குமா?” என்று தளபதியின் மனைவி சொல்ல, தளபதிக்கு யோசனை ஓன்று தோன்றியது.

உடனே பக்கத்து செல்வந்தர் வீட்டில் வளர்க்கப்பட்ட பூனை ஓன்று கொண்டு வரப்பட்டது. அப்பூனை மிக திறமையான பூனையென்றும், பலவாறு பழக்கப்பட்டது என்ற சிறப்புகள் வாய்ந்த பூனை என்றும் சொல்லப்பட்டது.

அப்பூனையை படுக்கை அறைக்குள் விடவே, சிறிது நேரத்தில் தப்பித்தோம் பிழைத்தோமென்று எலியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் வீட்டை விட்டே வெளியேறி ஓடி மறைந்தது.

இவ்வாறு அடுத்தடுத்ததாக பல சிறப்பு வாய்ந்த பூனைகள் கொண்டு வரப்பட்டு, அனைத்தும் மண்ணை கவ்வின. இறுதியாக அரசருக்கு தகவல் அனுப்பப்பட்டு, அரசரின் சிறப்பு பார்வையில் வளர்ந்த பூனை கொண்டு வரப்பட்டது.
 
அரசரின் பூனை, அரசனுக்கே உரிய மிடுக்கான நடையில் தளபதியாரின் படுக்கையறைக்குள் சென்றது. சென்றதுதான் தாமதம்.

“அய்யய்யோ! அம்மம்மா! காப்பத்துங்கடோய்!” என்றவாறு அரண்மனைப்பூனை விழுந்தடித்து ஓடிவந்தது. தளபதி கவலைகொள்ள ஆரம்பித்தார். மெதுவாக அரச பூனையிடம் பேசினார்.

“நான் உங்களத்தானே நம்பியிருந்தேன். இப்போது என்ன செய்வது?”

“அடப்போய்யா! நீ வேற. எங்கள எத வெச்சுயா நம்பினே? எங்களுக்கெல்லாம் வித்தையும் தெரியாது ஒரு மன்னும் தெரியாது. வேணுன்னா ஒன்னு செய். இந்த மேல் ஜாதி பூனைகள விட்டுட்டு, சாதாரண பூனையை கொண்டாந்து முயற்சி பண்ணு.”

தளபதி நபிக்கையற்று சொன்னார். “சிறப்பு வாய்ந்த பூனைகள்னு பேரெடுத்த உங்களாலே எதுவும் பண்ண முடியல. ஒரு சாதாரண பூனையால என்ன செய்ய முடியும் அரச பூனையே?”

“யோவ்! நாங்கெல்லாம் சும்மாய்யா. எங்களுக்கு நேரத்துக்கு நேரம் சாப்பாடு வருது, அதனால எங்களுக்கெல்லாம் பசியே இருக்காது. பசி இல்லாததால, எங்களுக்கு வேட்டையாட தெரியாது. ஆனால் சாதாரண பூனை அப்படியல்ல. அதுங்களுக்கு பசிக்கும். அப்போது வேட்டையாடும். எப்போது பாயும், எப்போது கவ்வும் என்று யாராலும் சொல்ல முடியாது. அதுங்களை கண்டாலே எலிகலெல்லாம் ஓடி ஒளிந்து கொள்ளும். அதுங்களை நினைத்தாலே எனக்கு ஆச்சர்யமா இருக்கு.”

“ஒருமுறை நான் அப்படிப்பட்ட பூனை ஒன்றை சந்தித்தேன். உன்னுடைய தந்திரம் என்ன? உன்னுடைய தனித்திறமை என்ன என்று கேட்டதற்கு, அது பதில் பேசாமல் கண்ணை மூடி தூங்கிவிட்டது. நான் மறுபடியும் எழுப்பி கேட்டேன். அதற்க்கு அந்த பூனை, “அதெல்லாம் எனக்கு தெரியாது. நான் ஒரு பூனை. அவ்வளவுதான் தெரியும்.” என்று சொல்லிவிட்டு மறுபடியும் கண்ணை மூடி தூங்கியது. நான் மறுபடியும் எழுப்பி கேட்டேன்.

“பூனைஎன்றால்...”

“பூனையென்றால் பூனை அவ்வளவுதான்.”

“அது தெரியும். உன்னுடைய..”

“என்ன முட்டாள்தனமாக பேசுகிறாய்! பூனையென்றால் பூனை. எலியை பிடிக்கும் பூனை. இதைத்தவிர தந்திரமென்ன? தனித்திறமையென்ன? கிறுக்குத்தனமாக கேள்வி கேட்டு என்னை கடுப்பேத்தாதே! எனக்கு தூக்கம் வருகிறது.” என்று சொல்லி அந்த பூனை என்னிடமே சண்டைக்கு வந்து விட்டது. அதனால் நீ சாதாரண பூனையை கொண்டுவர ஏற்பாடு செய்.” என்று அரச பூனை யோசனை சொல்ல, சாதாரண பூனை கொண்டு வரப்பட்டது.

சாதாரண பூனை தளபதியின் அறைக்குள் விடப்பட்டது. விடப்பட்ட வேகத்தில் அது எலியை கவ்விக்கொண்டு வந்து, வாசலை நோக்கி ஓடியது.

அனைவரும் ஆச்சர்யப்பட்டனர். மற்ற மேல்ஜாதி பூனைகளுடன் அரசபூனையும் எல்லோரும் சேர்ந்து ஓன்று கூடி, சாதாரண பூனையை பார்த்து, உன் கலைத்திறமை என்ன? உனது தனித்திறமை என்ன என்று கேட்டன.

“அதெல்லாம் எனக்கு தெரியாது. நான் ஒரு பூனை. அவ்வளவுதான் தெரியும். நீங்களும் பூனையென்றால், பூனையாகவே இருங்கள்.” என்று சொல்லிவிட்டு எலியை கவ்விக்கொண்டு ஓடி மறைந்தது.

ஒவ்வொரு தனி மனிதனுடைய ஆற்றலும் முழுமையாக வெளிப்பட வேண்டுமெனில், அது அவனை, அவனது சுயத்தை உணர்ந்தாலன்றி வேறு வழியில்லை. அதற்க்கு முதலில், நாம் மாய தோற்றங்களில் சிக்கிக்கொள்ளாமல், நம்மை நாமறிவது கட்டாயமாகிறது.

                                               வே.சுப்ரமணியன்.


27 comments:

  1. நமது பலமும், பலவினமும் நம்மால் உணரப்படுமாயின் - புகழ்ச்சி, இகழ்ச்சி நம்மை பாதிக்காது. நல்ல பதிவு.

    ReplyDelete
  2. மணி ,
    புகழ்ச்சி இகழ்ச்சி க்கான விளக்கங்கள் வித்தியாசங்கள் கதைகள்
    அனைத்துமே அருமை. இது உண்மை புகழ்ச்சி தான் .
    ஐயம் கொள்ள வேண்டாம்.

    ReplyDelete
  3. நன்றாக உள்ளது..!

    ReplyDelete
  4. வாழ்வியல் நுட்பங்களை அழகாகப் படம்பிடித்துக்காட்டும் பதிவு..

    அருமை தம்பி.

    ReplyDelete
  5. சில புகழ்ச்சிகள் உச்சிக்கு ஏற்றுவதுபோல் ஏற்றி, பாதாளத்தில் தள்ளிவிடும் அபாயம் கொண்டவை. சில இகழ்ச்சிகள், உச்சியிலையே சவக்குழி தோண்டும் அபாயம் கொண்டவை. பெரும்பாலும் புகழ்ச்சிகளும் இகழ்ச்சிகளும் நம்முடைய உண்மை தோற்றங்களை மூடி மறைக்கும் ஒன்றாகத்தான் இருக்கிறது.


    சிந்திக்கும்விதமாகச் சொன்னீர்கள்..

    நன்று..

    ReplyDelete
  6. புகழ்ச்சி -- இகழ்ச்சி பற்றி
    நீங்கள் கொடுத்த விளக்கமும் அதை
    விளக்கிய முறையும் மிகவும்
    வித்தியாசமாக இருக்கிறது நண்பரே.

    ReplyDelete
  7. @ஸ்ரவாணி தங்களது தொடர் வருகையால் நான் நெகிழ்ந்துபோகிறேன் தோழி! வருகைக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி தோழி!

    ReplyDelete
  8. @தமிழ் உதயம் அருமையாக சொன்னீர்கள் அய்யா! நமது சுயத்தை அறியும் போது நமது பலமும், பலவினமும் நம்மால் உணரப்பட்டுவிடும். சிந்தனை மிகுந்த கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றியைய்யா!

    ReplyDelete
  9. @scsudha தங்களது வருகைக்கும், அன்பான ஆதரவிற்கும் மிக்க நன்றி தோழி!

    ReplyDelete
  10. @guna thamizh தங்களது ஆழ்ந்த வாசிப்பிற்கும், மேம்பட்ட வருகைக்கும், அன்பான ஆதரவிற்கும் மிக்க நன்றி அண்ணா!

    ReplyDelete
  11. @மகேந்திரன் தங்களது மனம் திறந்த பாராட்டிற்கும், ஆழ்ந்த வாசிப்பிற்கும், மேம்பட்ட வருகைக்கும் மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
  12. பூத்துவரும் பொன்னெழிலாய்
    பூக்கட்டும் புத்தாண்டு!
    ஏழுவண்ண வானவில்லாய்
    வண்ண வண்ண இன்பங்கள்
    நிலைத்திருக்கட்டும் இவ்வாழ்வில்!

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பிற்கினிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. ஒரு மிகசிறப்பான கருத்தை சொல்லி அதற்க்கு தெளிவை தந்து உள்ளீர்கள் சிறப்பு பாராட்டுகள்.

    ReplyDelete
  15. இன்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவு பற்றிப் பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.முடிந்தால் பாருங்கள்.

    ReplyDelete
  16. @சென்னை பித்தன் இப்போதுதான் பயணம் மேற்கொண்டு, நடு கடலில் ஒரு சிறிய படகு, தான் செல்லும் வழி சரிதானா? என்று குழம்பி தவித்துக்கொண்டிருக்கும் வேலையில், அந்த சிறிய படகிற்கு முன்னே வெகு தொலைவில் சென்று கொண்டிருக்கும் ஒரு பெரிய கப்பல், “வா நண்பனே! நீ சரியான திசையை நோக்கித்தான் துடுப்பு வீசி வந்து கொண்டிருக்கிறாய்!” என்று அந்த சிறிய படகிடம் பாராட்டி வழி காட்டும்போது, அந்த சிறிய படகு எவ்வாறு மகிழ்வுடனும், தெளிவுடனும், நம்பிக்கையுடனும், துடுப்பு வீசுமோ, அதே நிலைமையில் நான் இப்பொழுது இருக்கிறேன் அய்யா! தாங்கள் கொடுத்த இந்த ஆதரவு, என்னை மிக வேகமாக செயல்பட தூண்டுகிறது அய்யா! எனது வலைப்பதிவை அனைத்து நல் உள்ளங்களிடமும் எடுத்துசென்றதற்கு, எனது மனம் திறந்த நன்றி அய்யா! தங்களது பணி என்றும் தொடர்ந்து சிறக்க ஆசைப்படுகிறேன் அய்யா! தங்களுக்கும், தங்களுடைய அன்பு உறவுகளுக்கும், எனது இனிமையான, தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழ்த்துக்கள் அய்யா!

    ReplyDelete
  17. சாதாரண பூனை தளபதியின் அறைக்குள் விடப்பட்டது. விடப்பட்ட வேகத்தில் அது எலியை கவ்விக்கொண்டு வந்து, வாசலை நோக்கி ஓடியது.

    எளிமை.அருமை பதிவு

    ReplyDelete
  18. மிகவும் ரசித்த பதிவு..! குட்டிக் கதைகள் அருமை..!

    ReplyDelete
  19. தங்கள் பழைய பதிவு மீண்டும் மறுபதிவு செய்துள்ளீர்களே...
    நல்ல சிந்தனை.

    ReplyDelete
  20. @விஜயன் தங்களது சிறப்பான வருகைக்கு மிக்க நன்றி நண்பா!

    ReplyDelete
  21. உங்கள் தண்ணீர் பந்தலில் புதிதாக நீர் அருந்த வந்தவன், அதனால் நட்புடன் ஒரு கைகுலுக்கல். தன்னைத் தான் அறிதல் மிகவும் சிறப்பான பதிவு. பிடித்த வரிகளை மேற்கோள் காட்ட காபி பேஸ்ட் செய்ய முடியவில்லை. அதை சரி செய்தல் நன்றாக இருக்கும், இல்லை நீங்கள் தான் அப்படி வைதுலீர்கள் என்றாலும் நலம்,.

    தன்னைத் தான் அறிதல் பதிவில் நீங்கள் கூறிய சிங்கம் மற்றும் எலி கதை மிகவும் அருமை.

    உங்களைத் தொடர்கிறேன் தொடருங்கள்

    படித்துப் பாருங்கள்

    வாழ்க்கைக் கொடுத்தவன்

    ReplyDelete
  22. @சீனு தங்களை தண்ணீர்ப்பந்தலுக்கு அன்புடன் கைகுலுக்கி வரவேற்கிறேன் நண்பரே! எனது படைப்பு ஒன்று, copy, past மூலம் திருடப்பட்டது. அதன் விளைவாக ஏற்ப்படுத்தப்பட்டதுதான் disabled copy,past. இருப்பினும் மேற்கோள்காட்ட இயலாமை செய்தமைக்கு வருந்துகிறேன்.
    தங்களது அன்பு நிறைந்த வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே! நமது உறவு வரும் காலங்களில் இனிதே பெருகும்! நன்றி!

    ReplyDelete
  23. மிகச்சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்ட தளம் உங்களுடையது
    குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா பாடல்தான் நினைவில் தோன்றுகின்றது
    உங்கள் எழுத்துக்களை படிக்கையில்...

    ReplyDelete
    Replies
    1. தண்ணீர்ப்பந்தலுக்கு தங்களை வரவேற்கிறேன் நண்பரே! வரும்காலங்களில் மேலும் பகிர்ந்துகொள்வோம். தங்களது வருகைக்கு மிக்க நன்றி நண்பரே!

      Delete
  24. நம்மை நாம் அறிந்திருந்தால் பின் புகழ்ச்சியா இகழ்ச்சியா என கவலை படவேண்டியதில்லையே அண்ணா! அருமையான பதிவு!

    ReplyDelete
    Replies
    1. நம்மை நாம் அறிந்திருந்தால்... புகழ்ச்சியும் இகழ்ச்சியும் வெறும் வார்த்தைகள்தான். அது நம்மை நாம் உணர்ந்திருந்தால்தான் சாத்தியம். அப்படி நம்மை நாம் உணர்ந்திராவிட்டால்....
      அதற்கான தடைகளை ஆராய வேண்டியுள்ளது. அப்படி நம்மை நாம் உணர்வதற்கு தடையாக இருக்கும் ஒன்றைத்தான் சுட்டிக்காட்டினேன் சகோ!

      தங்களது ஆழ்ந்த வாசிப்பிற்கும், புரிதலுக்கும், மேம்பட்ட கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ!

      Delete

அதிகமான கருத்துரைகளை விட.. எனது தவறுகளை சுட்டிக்காட்டும் ஒரே ஒரு கருத்துரை மட்டும் எனக்கு போதும். அது தங்கள் இட்டதாக இருக்கட்டும்! தங்களது வருகைக்கு மிக்க நன்றி!